‘புரெவி’ புயல் இரவில் கடக்கக்கூடிய சாத்தியம்

361 0

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த தாழமுக்கம்   ஆழமான தாழமுக்கமாக வலுவடைந்து நேற்று 01ஆம் திகதி  1130 மணிக்கு திருகோணமலைக்கு தென்கிழக்காக ஏறத்தாழ 330 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ளது. 

இது ‘புரெவி’ புயலாக உருவெடுத்து மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மட்டக்களப்புக்கும் பருத்தித்துறைக்கும் இடையேயான கிழக்கு கரையை இன்று 02ஆம் திகதி மாலையில் அல்லது இரவில் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு, வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் இடையிடையே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியமுண்டு.

சில இடங்களில் 200 மி.மீ க்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேல், மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 75-85கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.