அக்கரைப்பற்றில் ஓர் உப கொத்தணி உருவாக வாய்ப்பளிக்காதீர்கள்

305 0

கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று 235 ஆக அதிகரித்துள்ளதுடன் பிசிஆர் பரிசோதனையில் அக்கரைப்பற்றில் இன்று வரை 91 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே அக்கரைப்பற்று ஓர் உப கொத்தணியாக உருவாக வாய்ப்பளிக்காதீர்கள் என கிழக்கு மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் மருத்துவர் அ.லதாகரன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளரை தொலைபேசியில் இன்று செவ்வாய்க்கிழமை தொடர்பு கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திருகோணமலையில் சுகாதார பிராந்தியத்தில் 16 பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 11 பேரும், மட்டக்களப்பு சுகாதார பிராந்தியத்தில் 88 பேரும், கல்முனை சுகாதர பிராந்தியத்தில் 120 பேரும் அடங்கலாக 235 பேருக்கு இன்று முதலாம் திகதி வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் அக்கரைப்பற்று சந்தையுடன் தொடர்புபட்ட 91 பேருக்கு இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளதுடன் அம்பாறையில் 1361 பேரும், மட்டக்களப்பில் 5287 பேரும், திருகோணமலையில் 1249 பேரும், கல்முனையில் 2776 பேரும் அடங்கலாக கிழக்கு மாகாணத்தில் 10,673 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருந்தபோதும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் தொடர்ச்சியாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகளில் இவற்றை அவதானிக்க முடிகின்றது. எனவே எதிர்காலத்தில் அங்கு ஒரு கொரோனா உப கொத்தணி உருவாகாமல் இருப்பதற்கு சுகாதாரத் துறையினர், பொலிசார், இராணுவத்தினர் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் உட்பட சுகாதார அமைச்சு விடுத்துள்ள சுகாதார வழிமுறைகளைக் கையாள்வதுடன் தேவையற்ற விதத்தில் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கியிருப்பதன் மூலம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார்.