காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 373 பேர் தனி​மைப்படுத்தல்

235 0

  காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் தற்போதைய கொரோனா நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் தற்போதைய நிலையில் நவம்பர் மாதத்தில் இன்று வரையான காலப்பகுதியில் 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பேரும், மன்னார் மாவட்டத்தில் இருந்து 4 பேரும், முல்லைத்தீவில் இருந்து 2 பேருமாக மொத்தமாக நவம்பர் மாதத்தில் 27 பேர் நவம்பர் மாதத்தில் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதத்தில் வட மாகாணத்தில் 7,682 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களில் 27 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள்

யாழ்ப்பாண மாவட்டத்திலே காரைநகர் பிரதேசத்தில் கடந்த வாரம் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளியுடன் தொடர்பில் இருந்த 97 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் அவர்களுக்குரிய பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. கிடைக்கின்ற முடிவுகளின் பிரகாரம் அடுத்த கட்ட நகர்வுகள் தீர்மானிக்கப்படும்.

நேற்றைய தினம் சில பத்திரிக்கைகளில் தவறான செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது. யாழ் குடாநாடு முடக்கப்படும் என அது ஒரு தவறான செய்தியாகும் தற்போதைய சூழ்நிலையில் யாழ் மாவட்டத்தினை முடக்க வேண்டிய தேவையில்லை எனினும் காரைநகர் பிரதேசத்தில் தனிமைப்படுத்தலில்உள்ளவர்களின் பிசிஆர் முடிவுகளின்படி சில வேளைகளில் காரைநகர் பிரதேசம் முடக்கப்பட கூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன.மேலும்

யாழ் மாவட்டத்தில் இயங்கி வந்த மருதங்கேணி கொரோனா சிகிச்சை நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது அங்கிருந்த 30 நோயாளர்களை நேற்று கிளிநொச்சி கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு மாற்றியுள்ளோம் என்றார்.