கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது

319 0

naseer-400x255-720x480சிறுபான்மையின மக்களின் உரிமையை நசுக்குவதற்கு கடந்த அரசாங்கம் எவ்வாறு பொதுபலசேனாவைப் பயன்படுத்தியதோ அதைப்போன்றே தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் செயற்படுகின்றது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் குற்றம் சுமத்தியுள்ளார்.

பொதுபலசேனாவைத் தாக்குவதற்கு மட்டக்களப்பில் ஒரு குழு தயாராக வைக்கப்பட்டுள்ளது என அறிந்தே தாம் பொதுபலசேனாவை மட்டக்களப்பு செல்லவிடாது தடுத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்த நிலையில், நீதியமைச்சரின் குறித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

பொதுபலசேனா கட்சியின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசாரதேரர் நீதிமன்ற உத்தரவையே கிழித்தெறிந்து நீதிமன்றத்தை அவமதித்துள்ள நிலையில் அவரை இதுவரை கைதுசெய்யாமை சிறுபான்மை மக்களிடையே சந்தேகத்தையே தோற்றுவித்துள்ளது.

பொதுபலசேனாக் கட்சியினர் கிழக்கு மாகாணத்தில் தாக்குதல் ஒன்றை நடாத்தும் திட்டத்துடனேயே கிழக்கு மாகாணத்துக்கு வந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளிவந்துள்ளன. இவர்கள் நாட்டின் சட்டத்தையும் அமைதியையும் சீர்குலைப்பதற்கு திட்டமிட்டு செயற்படுகின்றார்கள் என்பதற்கு இவற்றைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை.

பொதுபல சேனா அமைப்பினர் வன்முறையை தூண்டும் நோக்கத்தில்தான் மட்டக்களப்புக்கு பயணித்தார்கள் என்பது பகிரங்கமான உண்மை என்றபோதிலும், பொதுபல சேனாவைத் தாக்குவதற்கு மட்டக்களப்பில் ஒரு குழு தயாராக இருந்தமையினாலேயே அவர்களை தடுத்ததாக நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ கூறியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம். ஏன் இந்த அரசாங்கம் உண்மையை பகிரங்கமாக கூற மறுக்கின்றது?

நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப வெளிப்படைத் தன்மை மிகவும் முக்கியமானது. ஆகவே மத நல்லிணக்கத்தையும், தேசிய ஒற்றுமையைச் சீர் குலைப்போர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.