ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி – 19 பேர் உயிரிழப்பு

345 0

1தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்த அதிர்ச்சி தாங்காமல் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

செய்யூர் அருகே கடலூர் காலனியை சேர்ந்தவர் பாவாடைராயன். அவரது மகன் ஜெயராமன். 60 வயதான கூலி தொழிலாளியான இவர் அதிமுக கட்சியின் தீவிர தொண்டர்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை தனியார் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த ஜெயராமன் அதிர்ச்சி அடைந்து மாரடைப்பினால் செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சேர்ந்த 65 வயதான அதிமுக பிரமுகர் சிவப்பிரகாசம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கவலைக்கிடம் என்று செய்தி வந்ததை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.

கிருஸ்ணகிரி மாவட்டம் வீரமலையை சேர்ந்தவர் 53 வயதான சின்னபிள்ளை முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை டிவியில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இதேபோல், சின்னகரடியூர் பகுதியை சேர்ந்தவர் 76 வயதான மாணிக்கம், காவேரிப்பட்டணம் ஒன்றியம் விலாங்குமுடியை சேர்ந்தவர் 60 வயதான பாப்பாத்தி, தர்மபுரி மாவட்டம் ஊட்டமலையை சேர்ந்தவர் 55 வயதான முருகேசன், சேலம் மாவட்டம் சென்றாயனூர் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான அய்யம்மாள், நாகை கீச்சாங்குப்பம் சுனாமி குடியிருப்பை சேர்ந்த 54 வயதான ராமன், திருச்சி திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஆரோக்கியசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் உயிரிழந்தனர்.

அத்துடன், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த எம்சிஏ பட்டதாரியான மனுநாயகி, ஜெயலலிதா இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்து மரணமடைந்தார்.
இவர்களை போல் ஜெயலலிதாவின் மறைவு செய்தியை கேட்ட அதிர்ச்சியில் தமிழகம் முழுவதும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.