அமித் ஷா வருகையால் தமிழ்நாட்டின் விதி மாறும்… பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி

238 0

தமிழகம் வரும் உள்துறை மந்திரி அமித் ஷாவை வரவேற்று பாஜகவினர் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை மந்திரியுமான அமித் ஷா 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். கலைவாணர் அரங்கத்தில் இன்று மாலை நடைபெறும் விழாவில் கலந்துகொள்ளும் அமித் ஷா, திருவள்ளூர் மாவட்டம் தேர்வாய்கண்டிகையில் ரூ.380 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய நீர்த்தேக்க திட்டத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்க உள்ளார். மேலும் ரூ.61,843 கோடி மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-ம் கட்ட பணி உள்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தமிழகத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க இருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித் ஷாவின் வருகையால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். சென்னை வரும் அவரை வரவேற்க பிரமாண்டமான வரவேற்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அமித் ஷாவை வரவேற்று பாஜகவினர் சமூக வலைத்தளங்கள் மூலம் கருத்துக்களை பதிவிட்டவண்ணம் உள்ளனர்.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அமித் ஷாவை வரவேற்று டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாரதத்தின் நிகழ்காலமே ! தமிழகத்தின் எதிர்காலமே ! தமிழகம் வரும் தலைமகன் அவர்களே வருக வருக !! என எல்.முருகன் குறிப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘எதிரிகள் அவர்தம் படை புகுந்து நைய புடைய எம்தலைவன் வருகிறார். தமிழ்நாட்டின் விதிமாறும் இனி காண்பீர்! எதிர்ப்போர் யாவரும் விலகுவீரே’ என கூறி உள்ளார்.