ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஆணைக்குழு – ஸ்கைப் வழியாக சாட்சியமளிக்கும் ரிஷாட்

373 0

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் ஸ்கைப் வழியாக இன்று (வியாழக்கிழமை) சாட்சியமளிக்கின்றார்.

ஆணைக்குழுவின் நடவடிக்கைகளின் தொடக்கத்தில் பதியுதீனுக்காக முன்னிலையான சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் தனது சாட்சியங்களை தமிழ் மொழியில் வழிநடத்துமாறு ரிஷாட் கோரியதாக ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளர் நோய் காரணமாக இன்று கடமைக்கு சமுகமளிக்கவில்லை என்பதால் சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் சாட்சியங்களை வழங்குமாறு ஆணைக்குழு சாட்சிகளுக்கு அறிவுறுத்தியது.

தேவைப்படும்போது சில தமிழ் சொற்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியும் என்று ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

எவ்வாறாயினும் தனது தாய்மொழியான தமிழில் சாட்சியமளிக்க ஜனநாயக உரிமை இருப்பதாகவும் சிங்களத்தில் சாட்சியங்களை வழங்கும்போது சில விடயங்களை சரியாக விளக்குவது கடினம் என்றும் ரிஷாட் கூறினார்.

அதன்படி மதிய உணவு இடைவேளையின் பின்னர் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் மூலம் தமிழில் சாட்சியங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக ஆணைக்குழு அறிவித்தது.