தமது உற்பத்திகளுக்குத் தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள உள்நாட்டு கைத்தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்திற்குள் நிவாரணத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. கொரோனா தொற்றுக் காரணமாக சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியாததால் தடை அகற்றப்பட வேண்டிய பொருட்களை இனங்காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான பட்டியல் நாளையும் நாளை மறுதினமும் தயாரிக்கப்படவுள்ளன. கைத்தொழில் அமைச்சு, சுங்கப் பிரிவு, இலங்கை முதலீட்டுச் சபை, இலங்கை கைத்தொழில் நிறுவகம் என்பவற்றை உள்ளடக்கிய குழுவொன்றின் மூலம் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படும். இதன் பின்னர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்தப் பொருட்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

