நாளை இரண்டு மணிநேரம் மட்டுமே கூடவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றம்!

233 0

சிறிலங்கா நாடாளுமன்றம் நாளை இரண்டு மணிநேரம் மட்டுமே கூடவுள்ள நிலையில், இதன்போது சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் இரண்டு புதிய விதிமுறைகளை முன்வைப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மட்டுமே நாடாளுமன்றம் கூடும் என்றும் இதன்போது சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் இரண்டு விதிமுறைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நாடளுமன்ற பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற அலுவல் பற்றிய குழு கூடவுள்ளது.

இதன்போது 2 மற்றும் 3 வது வாசிப்பைத் தொடர்ந்து 2020 ஆம் நிதியாண்டுக்குரிய சேவை செலவினங்களுக்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த நிதி ஒதுக்கீட்டுப் பிரேரணையை அடுத்த மாதம் 12 ஆம் திகதி நிறைவேற்றுவ சபாநாயகர் தீர்மானித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தவிர வேறு எவரும் நாடாளுமன்றத்திற்கு செல்ல அனுமதி கிடையாது. ஊடகவியலாளர்களுக்கும் அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.