குருநகர் பாசையூரில் சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – யாழ் மாநகர முதல்வர்

240 0

யாழ்ப்பாணம் – குருநகர் பாசையூர் பகுதி மற்றும் மீன் சந்தைகளில் நாளையிலிருந்து சுகாதார நடைமுறைகள் இறுக்கமாகமாக நடைமுறைப்படுத்தப்படும் என யாழ் மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் அதிரடி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

மேலும் குறித்த சுகாதார நடைமுறைகளை மீறுவோருக்கு சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

குருநகர் பகுதியில் இருவருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் இனிவரும் நாட்களில் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம் என குறிப்பிட்டுள்ளார்.

அதிலும் குறிப்பாக குருநகர் ,பாசையூர்  பகுதி மற்றும் மீன் சந்தை பகுதியில் சுகாதார நடைமுறை பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினரால் இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அங்கு வருபவர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படுவது அவசியம் என்றும் கூறினார்.

மேலும் குறித்த நடைமுறை நாளை காலையிலிருந்து அமுல்படுத்தப்படவுள்ளது என்றும் எனவே பொதுமக்கள் குறித்த விடயம் தொடர்பில்  அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

குருநகர் பாசையூர் சந்தைக்கு வருவோர் கட்டாயமாக தமது பதிவினை மேற்கொண்ட பின்னரே அப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.