வெளி மாவட்டத்தார் அத்துமீறி மேய்ச்சல் தரையில் பயிர்செய்வதை தடுக்க கூட்டமைப்பு தீர்மானம்

298 0

மட்டக்களப்பு மாவட்டத்தில் அத்துமீறி மயிலந்தமடு, மாதவனை பகுதியில் மட்டு. மாவட்ட கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரைகளை வெளி மாவட்டத்தை சேர்ந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களும் புத்த பிக்குகள் சிலரும் அபகரிப்பதை தடுப்பது தொடர்பாக அவசியமான கலந்துரையாடல், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சி மூத்த துணைத்தலைவருமான பொ செல்வராசா தலைமையில் மட்டக்களப்பில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.சாணாக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், த.கனகசபை, மாநகர முதல்வர் தி.சரவணபவான், பிரதிமுதல்வர் க.சத்தியசீலன் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான் மா நடராசா, இ.பிரசன்னா, மண்முனை மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் பொ. செல்லத்துரை, ஓய்வுநிலை அரச அதிபர் மா உதயகுமார், ஓய்வு நிலை மாவட்ட காணி ஆணையாளர் க.குருநாதன் மற்றும் கூட்டமைப்பின் பிரமுகர்கள் ஆகியோர் சமூகம் கொடுத்து, அத்துமீறிய காணி அபகரிப்பு தொடர்பாக ஆராய்ந்தனர்.

இதன் அடிப்படையில் ஐந்து கட்டங்களாக நடவடிக்கை எடுப்பது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. முதலாவதாக மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் மற்றும் காணி தொடர்பாக விடங்களை கையாளும் மேலதிக அரச அதிபர் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர்களை உள்ளடக்கிய சந்திப்பை ஏற்படுத்துதல்.

இரண்டாவதாக, கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடலை ஏற்படுத்தி உடனடியாக மேய்ச்சல் தரைகளில் அத்துமீறி பயிர்செய்கை செய்பவர்களை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுதல். மூன்றாவதாக பாராளுமன்றத்தில் பிரதமர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளல். நான்காவதாக பண்ணையாளர்கள் மற்றும் காலநடை வளர்ப்பாளர்களை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கான ஒழுங்குகளை ஏற்படுத்துதல்

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்வதுடன் இந்த நான்கு விடயங்களுக்கும் சாதகமான பதில்கள் இல்லாவிடின் ஐந்தாவதாக உச்ச நீதிமன்றில் சட்டநடவடிக்கை மேற்கொள்வது எனவும் அதற்கான சகல ஆவனங்களையும் உடன் தயாரிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஏனைய பொது விடயங்கள் தொடர்பாக அடுத்த கூட்டங்களில் ஆராய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.