தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வைப் பெற்றுத்தர வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும். – கஜேந்திரகுமார்

568 0

13 ஆம் திருத்தம் தீர்வல்ல இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வைப் பெற்றுத்தர வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும். இன்று 08-10-2020 பாராளுமன்றில் உரையாற்றும்போது கஜேந்திரகுமார் வலியுறுத்து.

13 ஆம் திருத்தம் தீர்வல்ல இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ்த் தேசம் அங்கீகரிக்கப்பட்ட தீர்வைப் பெற்றுத்தர வேண்டியது இந்தியாவின் பொறுப்பாகும்.

இன்று 08-10-2020 பாராளுமன்றில் உரையாற்றும்போது கஜேந்திரகுமார் வலியுறுத்து.

தமிழ் மக்களை பொறுத்தவரையிலே அவர்கள் சம்பந்தப்பட்ட மிக முக்கியமான சர்வதேச உடன்படிக்கைகளில் ஒன்று இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்திய- இலங்கை உடன்படிக்கையாகும். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இவ்வுடன்படிக்கையின் முக்கிய குறிக்கோளாக அமைந்திருந்தது.

தமிழ் மக்கள் இவ்வுடன்படிக்கையின் ஒரு தரப்பினராக இணைத்துக்கொள்ளப்படாதது இவ்வுடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாக இருப்பினும், தமிழ் மக்கள் இவ்வுடன்படிக்கையின் ஒரு தரப்பாக தவிர்க்கப்பட்டதினால் தமிழ் மக்களின் சார்பில் இவ்வுடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவிற்கு, இவ்வுடன்படிக்கை முழுமையாக அமுலாக்கப்படுவதனை உறுதிப்படுத்துவதற்கான மேலதிகமான ஒரு கடப்பாடு உள்ளது. ஆனால் உண்மை நிலவரமோ வேறு.

அன்று உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இலங்கை அரசோ அவ்வுடன்படிக்கையையும் , அதில் அடங்கிய சரத்துக்களையும் தான் அமுலாக்குவதாக கூறிக்கொண்டு அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தத்தினையும், மாகாணசபைகள் சட்டத்தின் மூலத்தினையும் அறிமுகப்படுத்தியது.

இச்சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்தபோது, அப்போதிருந்த முதன்மையான தமிழ்க் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அப்போதைய இந்திய பிரதமர் இராஜிவ் காந்திக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 28ம் திகதி திரு. சிவசிதம்பரம், திரு. அமிர்தலிங்கம் ஆகியோருடன் இச்சபையில் அங்கம் வகிக்கும் திரு. சம்பந்தனும் கையொப்பமிட்டு அனுப்பிய அந்தக் கடிதத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது;

“இந்திய நிபுணர்களின் பங்குபற்றுதலின்றி இச் சட்டமூலம் வரையப்பட்டு நம் மீது திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இச்சட்ட முன்வரைபை பகிரங்கப்படுவதற்கு முன் இந்திய அரசாங்கத்திடம் அதன் பிரதி சமர்ப்பிக்கப்படும் என்றே தமிழர் விடுதலைக்கு கூட்டணி எதிர்பார்த்திருந்தது. இவ்வாறு நடைபெறாது என நாம் கருதுவதனால் 1987 செப்ரெம்பர் 29ம்திகதி ஜனாதிபதி ஜயவர்தனவை நாம் சந்தித்து இந்தியாவிற்கு தெரியப்படுத்தாமலே இச்சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளமையிட்டு நாம் கவலையடைகிறோம் என தெரிவித்தோம்.

இது இந்தியாவை ஒரு தரப்பாக மதிக்காமல் நடத்துவதாக மாத்திரமன்றி, இவ்வொப்பந்தத்தில் உள்ள பந்தி 2.15ஐ மீறுவதாகவும் அமைந்துள்ளது.”

அக்கடிதத்தின் முடிவில், “இக்காரணங்களுக்காக தமிழ்மக்கள் திருப்தியடையும் வகையில் இவ்விடயங்களுக்கு தீர்வு காணப்படாமல் , மேற்படி சட்டமூலங்களை இப்போதுள்ள வடிவத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டாம் என ஜனாதிபதி ஜயவர்தனவை வற்புறுத்துமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டப்பட்டிருந்தது.

ஆகவே இந்திய இலங்கை உடன்படிக்கைக்கும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்திற்கும் இடையில் பாரிய இடைவெளி காணப்படுகிறது. நாம் பதின்மூன்றாம் திருத்தச் சட்டத்தினை நிராகரிக்கின்றோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இது ஒரு ஆரம்பப்புள்ளியாக கூட அமையவில்லை என்ற காரணத்தினாலேயே நாம் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தினை நிராகரிக்கின்றோம்.

தமிழ்மக்கள் பதின்மூன்றாம் திருத்தச்சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனைக் காரணங்காட்டி இவ்வொப்பந்ததினை கிழித்தெறிவதற்கு இதனை ஒரு சந்தர்ப்பமாக ஆளும்தரப்பினர், ஐனாதிபதியும், பிரதமரும் நினைக்கலாம். ஆனால் அது ஒருபோது நடக்கப் போவதில்லை. ஏனெனில் இநித்திய – இலங்கை உடன்படிக்கையும் பதின்மூன்றாம் திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை. அப்போதைய அரசாங்கம் இந்திய- இலங்கை உடன்படிக்கையை தன்னிச்சையாக வியாக்கியானப்படுத்தியதன் விளைவே பதின்மூன்றாம் திருத்தச்சட்டம்

ஆகவே, பதின்மூன்றாம் திருத்தச் சட்டமூலத்தை தமிழ்தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்விற்கான தொடக்கப்புள்ளியாகவேனும் நாங்கள் ஏற்றுக்கொள்ளாவிடினும், நாங்கள் அச்சட்டமூலத்தை நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இவ்வுடன்படிக்கையின் சரத்துக்களின் படி தமிழர் தேசத்தினை அங்கீகரித்து அவ்வொப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி அதனடிப்படையில் இத்தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வினை எட்டுவதற்கு இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்.

என்றார்.