பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுமி தற்கொலை முயற்சி- காதலன் உட்பட மூவர் கைது!

254 0

மட்டக்களப்பு, வவுணதீவில் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான சிறுமி தற்கொலைக்கு முயன்ற நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி வைத்தியசாலையில் இருந்து தப்பித்து கல்லடிப் பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலைசெய்ய முற்பட்டபோது படையினரால் காப்பாற்றப்பட்டார்.

இதனிடையே, சிறுமியை துஷ்பிரயோத்துக்கு உள்ளாக்கியமை தொடர்பாக சிறுமியின் காதலன் உட்பட மூவர் இன்று (வியாழக்கிழமை) பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது, வவுணதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுச் சிறுமி 22 வயதுடைய ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினமான கடந்த நான்காம் திகதி இரவு 11 மணியளவில் காதலன் சிறுமியை கையடக்கத் தொலைபேசி ஊடாக வீட்டிலிருந்து வெளியில் வருமாறு அழைத்துள்ளார்.

இதையடுத்து குறித்த சிறுமி வீட்டின் வெளிப்பகுதில் நின்றதாகவும் அங்கு மதுபோதையில் அவருடைய காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் வந்து சிறுமியை வீதிக்கு வருமாறு அழைத்தபோது சிறுமி வரமுடியாது எனத் தெரிவித்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

இந்நிலையில், காதலனின் நண்பர்கள் இருவர் சிறுமியை கட்டாயமாக அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு இழுத்துச்சென்றுள்ளனர்.

இதையடுத்து, சிறுமியின் காதலன் அவரை முதலில் பாலியல் பலத்காரம் செய்ததாகவும் நண்பர்கள் சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்டபோது சிறுமி சுதாகரித்துக்கொண்டு அங்கிருந்து வீட்டிற்குப் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அடுத்த நாள் ஐந்தாம் திகதி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அத்துடன். பாலியல் துஷ்பிரயோகம் செய்த காதலன் மற்றும் நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுள்ளது.

இதன் பின்னணியிலேயே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிந்த சிறுமி ஆறாம் திகதி இரவு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதேவேளை, தலைமறைவாகியிருந்த சிறுமியின் காதலன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவர் உட்பட மூவரை இன்று கைது செய்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.