நீர்கொழும்பு கடலில் காணாமல் போன 3 இளைஞர்களும் சடலங்களாக மீட்பு

261 0

நீர்கொழும்பில் கடலில் குளிக்கச்சென்று, காணாமல் போயிருந்த மூன்று இளைஞர்கள் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டனர் என்று கொச்சிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

நீர்கொழும்பு – கம்பல்தொட கடற்பகுதியில் கடலில் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் குளித்துக் கொண்டிருந்த இளைஞர்கள் மூவர் நீரில் மூழ்கிக் காணாமல் போயினர்.

இதையடுத்து நடத்தப்பட்ட தேடலில் நேற்று முன்தினம் அவர்கள் மீட்கப்படவில்லை. இந்நிலையில், நேற்று அவர்களின் சடலங்கள் கடற்படையின் சுழியோடிகளால் மீட்கப்பட் டது.

தலவாக்கலை – ஸ்டேலின் தோட்டத்தைச் சேர்ந்த 22 வயது முத்துக்குமார் சிந்துஜன், 23 வயது மனோகரன் சசிகுமார் மற்றும் பதுளை – நமுனுகள பகுதியைச் சேர்ந்த 20 வயது புகனேந்தர் பிரதீபன் ஆகிய இளைஞர்களே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தனர் என்று பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இளைஞர்களின் சடலங்கள் பிரேதபரிசோதனைக்காக, நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் சடலங்கள், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.