பாலியல் குற்றவாளியை சுடவேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்

235 0

உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஸ்டாலின் தடையை மீறி கிராம சபை கூட்டம் நடத்துவார், கடையை திறப்பார். தி.மு.க. ஆட்சியில் விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளை ஸ்டாலின் திரும்பிப் பார்க்க வேண்டும். எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆன பின்பு விவசாயிகளுக்கு நன்மை நடந்துள்ளது.

குடிமராமத்து மூலம் அனைத்து குளங்களும் தூர் வாரப்பட்டு நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நிரம்பி கொண்டிருக்கிறது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எடுத்த முயற்சியின் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் உள்ளது.

ஏழை விவசாயிகள், பாட்டாளிகள், படைப்பாளிகளுக்கு அனைத்து திட்டத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிசாமி. அவரின் புகழை கெடுப்பதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி எடுத்து வருகிறார். அவர் முயற்சி ஒருநாளும் பழிக்காது. அவர் முயற்சி கானல் நீராகத்தான் போகும்.

உத்தரபிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தால் அந்த குற்றவாளியை சுட வேண்டும். அங்கு சிறுமி உயிரிழந்தது தொடர்பாக காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, இந்த நேரத்தில் ராகுல்காந்தி அங்கு சென்று வம்பு இழுக்க கூடாது. காவல்துறை ராகுல் காந்தியை தடுத்திருப்பார்கள். தள்ளி விட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் தவறி விழுந்து இருக்கலாம்.

பெருந்தன்மைக்கு சொந்தக்காரர் நரேந்திர மோடி. அவரும் உத்தரபிரதேச முதல்வரும் ராகுல்காந்தி தள்ளி விடுவது போன்ற செயலை செய்திருக்க மாட்டார்கள். இதை வைத்து அரசியல் நடத்தி லாபம் தேடும் காங்கிரஸ் கட்சியின் நினைப்பு பிழைப்பை கெடுக்கும்.

துணை முதல்வர் புறக்கணிக்கப்படவில்லை. பணியின் காரணமாக அரசு விழாக்களில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம். அ.தி.மு.க. மிகப்பெரிய ஆலமரம் அதில் விழுதுகள் பல இருக்கும். அதில் எந்த விழுது பெரிது, எந்த விழுது சிறியது என பார்க்க முடியாது. அனைத்துமே பெரிய விழுதுதான். அனைத்துமே உறுதியானவர்கள்தான்.

அ.தி.மு.க.வை விட்டு யாரும் எங்கும் செல்ல மாட்டார்கள். இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மு.க.ஸ்டாலின் எண்ணங்களை தவிடு பொடியாக்கி வெற்றி இலக்கை நோக்கி அ.தி.மு.க. செல்கிறது. அ.தி.மு.க. வாழும், நிச்சயம் தமிழகத்தை தொடர்ந்து ஆளும்.

இவ்வாறு அவர் கூறினார்.