சிவகாசி அருகே கிராம இளைஞர்கள் குறுங்காடுகளை உருவாக்கி வருகின்றனர். மேலும் 60 ஆண்டுகளுக்கும் மேலாக மண் மூடிக் கிடந்த கண்மாயை தூர்வாரி மீட்டுள்ளனர்.
சிவகாசி அருகே உள்ள விஸ் வநத்தம் கிராம இளைஞர்கள் ஒன்று கூடி, தங்களது கிராமத்தில் இயற்கை அழகை மீட்டெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக 60 ஆண்டுகள் தூர்வாராமல் மண் மூடி இருந்த விஸ்வநத்தம் கண்மாயின் வரத்துக் கால்வாய்களைத் தூர்வாரும் பணியை கடந்த ஜனவரியில் தொடங்கினர்.
வரத்துக் கால்வாய்கள் அனைத் தையும் தூர்வாரி முடித்துவிட்டு தற்போது கண்மாயை தூர்வாரும் பணியைத் தொடங்கியுள்ளனர். அது மட்டுமின்றி குறுங்காடுகள் உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள சுற்றுச்சூழல் அமைப்பின் உறுப்பினர் ரமேஷ் கூறியதாவது:
வீதிகள் தோறும் மரம் வளர்ப்பது, நீர்நிலைகளைப் பராமரிப்பது, கண்மாய்களைத் தூர்வாருவது, மண்ணரிப்பு சம்பந்தமான அனைத்து வகையான மரங்களையும் கரைகளில் நடுவது, அதனை முறைப்படி பராமரிப்பது ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எங்கள் குழுவில் மொத்தம் 120 உறுப்பினர்கள் உள்ளோம். சுழற்சி முறையில் சிலர் காலை 6 மணி முதல் 8 மணி வரை களப்பணி ஆற்றுவர்.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே மரம் வைப்பது மட்டும் தான் எங்களது பணி. தற்போது வரை சுமார் 700 மரக்கன்றுகள் நட்டு அவற்றைப் பராமரிக்கிறோம்.
விஸ்வநத்தத்தில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் நம்மாழ்வார் குறுங்காடு ஒன்றை அமைத்துள்ளோம். அங்கு 130 மரக் கன்றுகளை வளர்த்து பராமரிக்கிறோம். எங்களோடு சேர்த்து ஆனைக்குட்டம் விதை இயக்கமும் பணியாற்றி வருகிறது.
சுமார் 60 ஆண்டுகளாகக் கண்டுகொள்ளப்படாமல் இருந்த 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட விஸ்வநத்தம் கண்மாயில் கருவேல மரங்களை அகற்றி தூர்வாரி அதை நீர் சேமித்து வைக்கும் கண்மாயாக மாற்றும் வேலையை செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

