20ஆவது திருத்தம் குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும்- திகாம்பரம்

195 0

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக விரைவில் கூடி ஆராய்ந்து முடிவு அறிவிக்கப்படும் என தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதித் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

20ஆவது திருத்தச்சட்ட மூலம் தொடர்பாக கேள்வியெழுப்பப்பட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பாக சமூகத்தில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மேற்படி சட்டமூலத்திலுள்ள உள்ளடக்கங்கள் தொடர்பாக ஆராய்ந்து வருகின்றோம். எமது மலையக புத்திஜீவிகளுக்கும் கருத்துகளை முன்வைப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

20ஆவது திருத்தச் சட்டமூலத்திலுள்ள சில சரத்துக்கள் தொடர்பாக அரசாங்கத்துக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு இல்லை. ஏற்கனவே வெளியிடப்பட்ட வர்த்தமானி திருத்தப்பட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் என்றார்கள்.

ஆனால், நாடாளுமன்றத்தில் குழுநிலை விவாதத்தின்போதே திருத்தப்படும் என தற்போது அறிவித்துள்ளனர். எனவே, எவ்வாறான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்பது எமக்குத் தெரியாது.

நாடாளுமன்றத்தில் சட்டமூலம் முன்வைக்கப்பட்ட பின்னர் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் உயர்பீடம் கூடி ஆராய்ந்து 20 குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கும். ஜனநாயகத்துக்கும், நாட்டுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும். அதனையே நாமும் விரும்புகின்றோம்” என்று தெரிவித்தார்.