இங்கிலாந்தில் துணை மேயராக இந்திய வம்சாவளி தொழில் அதிபர் தேர்வு

264 0

இங்கிலாந்தில் துணை மேயராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர் சுனில் சோப்ரா. இந்தியாவின் தலைநகர் டெல்லியை பூர்வீகமாக கொண்ட இவர் லண்டன் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக இவர் கடந்த 2013-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் துணை மேயராக தேர்வானார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டில் சவுத்வார்க் பெருநகரத்தின் மேயராக பொறுப்பேற்றார். இதன் மூலம் சவுத்வார்க் பெருநகரத்தின் மதிப்புமிக்க பதவியை வகித்த முதல் இந்திய வம்சாவளி நபர் என்ற பெருமையை சுனில் சோப்ரா பெற்றார்.

லண்டனிலுள்ள இந்திய வெளிநாட்டு காங்கிரசின் பொதுச்செயலாளராக இருந்து வரும் சுனில் சோப்ரா சவுத்வார்க் பெருநகர கவுன்சிலில் முதல் மற்றும் ஒரே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் என்பது குறிப்பிடத்தக்கது.