சார்ஜாவில் சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் சார்பில் அரேபிய மீன்கொத்தி பறவைகளை பாதுகாக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பறவைகளை இனவிருத்தி செய்து அதிகரிக்க இன்குபேட்டர் முறையில் குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சார்ஜாவில் உள்ள கல்பா பகுதியில் சதுப்புநில காட்டு பகுதியில் அரிய வகை இனமான அரேபிய மீன்கொத்தி பறவைகள் காணப்படுகிறது. மீன்கொத்தி உலகமெங்கும் பரவலாகக் காணப்படும் ஒரு பறவையினமாகும். ஏறத்தாழ 90 வகையான மீன்கொத்தி இனங்கள் உலகில் உள்ளன.
இவை பெரிய தலைகளும், நீண்ட கூரிய அலகுகளும், குட்டைக் கால்களும், சிறு வால்களும் கொண்டவையாகும். இதில் அரேபிய மீன்கொத்தி பறவைகள் மிக அரிய வகை உயிரினமாகும்.
இதன் முட்டைகள் மிக சிறியதாக உள்ளதால் சிறிய வகை உயிரினங்கள் அவற்றை உணவாக எடுத்துக்கொண்டு சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் அந்த பறவைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது சவாலாகவே இருந்து வந்தது. எண்ணிக்கையில் மிக குறைவான அளவே உள்ள இந்த பறவைகளை இனவிருத்தி செய்து அதிகரிக்க இன்குபேட்டர் முறையில் குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தற்போது இனபெருக்க காலமானதால் அந்த பறவைகள் கூடுகட்டி முட்டையிட தொடங்கியுள்ளது. அந்த முட்டைகள் சுற்றுச்சூழல் ஆணைய அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு கல்பா பறவை இனவிருத்தி மையத்தில் உள்ள இன்குபேட்டர் எந்திரத்தில் வைக்கப்பட்டது. குறிப்பிட்ட வெப்பநிலையில் பராமரிக்கப்பட்டு வந்த அந்த முட்டைகளில் ஒன்று குஞ்சு பொறித்துள்ளது.
இன்குபேட்டர் மூலம் குஞ்சு பொறிக்கப்பட்ட முதல் அரேபிய மீன்கொத்தி பறவை என்ற பெயரை இது பெறுகிறது. இந்த குஞ்சுடன் சேர்த்து தற்போது கல்பா சதுப்பு நில பகுதியில் 131 அரேபிய மீன்கொத்தி பறவைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுபோல் முட்டைகள் சேகரிக்கப்பட்டு இன்குபேட்டரில் பாதுகாப்பாக குஞ்சு பொறிக்க ஏற்பாடு செய்யப்படும் என சார்ஜா சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

