மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதே எனது அரசியல் பயணம்- ஜீவன் தொண்டமான்

300 0

பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதை விடவும் தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே எனது அரசியல் பயணம் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

ஹற்றனில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜீவன் தொண்டமான் மேலும் கூறியுள்ளதாவது, “நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட இடைக்கால கணக்கறிக்கை மூலம் எனது அமைச்சுக்கு ஆயிரத்து 56 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் கடந்த நான்கரை வருடங்களில் கடன் அடிப்படையிலேயே மலையகத்தில் வேலைகள் நடந்துள்ளன. அவற்றை மீள செலுத்த வேண்டியுள்ளது.

முதலில் அடிக்கல் நாட்ட வேண்டும். கட்டடத்தை நாமே திறந்து வைக்க வேண்டும் என்ற குறுகிய அரசியல் நோக்கில் திட்டங்களை உரிய வகையில் செய்யவில்லை.

எங்களுக்கு அடிக்கல் நாட்டுவது பிரச்சினை அல்ல. செய்யும் திட்டம் முறையாகவும் பயனாளர்களுக்கு நன்மை பயக்ககூடியதாகவும் இருக்க வேண்டும்.

பிரச்சினைகளை பேசி,பேசி காலத்தை ஓட்ட முடியாது. நீங்கள் பாடசாலை பிரச்சினையை அறிவித்தீர்கள். இன்று தீர்வை வழங்கினோம்.

மைதானம் தேவையென கூறினீர்கள். இட ஒதுக்கீடு தொடர்பில் கம்பனியுடன் பேசி அனுமதி பெறப்பட்டுள்ளது. விரைவில் நிதி ஒதுக்கப்பட்டு மைதானப்பணியும் ஆரம்பமாகும். இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமலை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளேன்.

அதேவேளை, கல்வி என்பது புத்தக படிப்பு மட்டும் அல்ல. அதனையும் தாண்டி பல விடயங்கள் உள்ளன. விளையாட்டு உட்பட பல்துறைகளில் மாணவர்களால் சாதிக்க முடியும்.

அதேபோல் அமைதி எனக்கூறி மாணவர்களை முடக்காமல், அவர்களுக்கு கேள்வி கேட்பதற்கான வாய்ப்புகளை ஆசிரியர்கள் வழங்கவேண்டும். அப்போதுதான் சிறந்த தலைவர்களை உருவாக்க முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.