மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட மாவடியோடைப் பகுதியில் இடம்பெற்ற திடீர் மின்னல் தாக்கத்தினால் பண்ணையாளர் ஒருவரின் 27 பசுக்கள் இறந்துள்ளன.
இடியுடன் கூடிய மழை பெய்த நிலையில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தினாலேயே குறித்த 27 பசுக்கள் இறந்துள்ளதாகவும் ஒரே இரவில் சுமார் 20 இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்டுள்ள எமக்கு அரசாங்கம் ஒரு ஊக்குவிப்பையாவது வழங்குமானால் எம்மால் இந்த தொழிலை தொடர்ந்து செய்யக்கூடியதாக இருக்குமென பண்ணையாளரான தம்பி ஐயா ரஞ்சன் கவலையுடன் தெரிவித்தார்.
வாழ்வாதாரங்களை இழந்து நிற்கின்றோம். இதனால் கிடைத்த வருமானத்தைக் கொண்டே எமது பிள்ளைகளின் கல்வியை முன்கொண்டு சென்றோம். தற்போது இந்த இழப்பினால் ஒட்டுமொத்த வருமானத்தையும் இழந்து நிற்கின்றோம் என பண்ணையாளரின் மனைவி தெரிவித்தார்.
இந்த சம்பவம் அக்குடும்பத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இறந்த பசுக்களை பெக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி கடற்படையினர் புதைத்தனர்.

