மலையக மக்கள் முன்னணியின் யாப்பை நான் மீறவில்லை – அனுசா சந்திரசேகரன்

336 0

மலையக மக்கள் முன்னணியின் யாப்பை தான் மீறவில்லை என அனுசா சந்திரசேகரன் தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் பிரதி பொதுச்செயலாளர் அனுசா சந்திரசேகரனை கட்சியிலிருந்து வெளியேற்றுவதாக மலையக மக்கள் முன்னணியின் உயர்பீடம் நேற்று (திங்கட்கிழமை) அறிவித்தது.

இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பாக தலவாக்கலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபையால் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பாக எனக்கு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

நானும் தேசிய சபையில் அங்கம் வகிக்கின்றேன். கூட்டம் தொடர்பாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனது தந்தையின் ஆதரவாளர்களும் தேசிய சபையில் இருக்கின்றனர். அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுபவர்களுக்கு அழைப்பு விடுத்து முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தனித்துவ அடையாளத்தை நிரூபிக்கும் நோக்கிலேயே பொதுத்தேர்தலில் சுயேட்சையாக களமிறங்கினேன். அதனை செய்தும் காட்டினேன். மக்களும் ஆதரவு வழங்கினார்கள்.

மக்கள் என்பதே மலையக மக்கள் முன்னணி, என்னை கட்சியைவிட்டு நீக்க சாதாரணதொரு குழுவால் தீர்மானிக்கமுடியாது. மக்கள் எனது பக்கமே இருக்கின்றனர். அவ்வாறு இல்லாவிட்டால் எனக்கு 17 ஆயிரத்து 107 வாக்குகள் கிடைத்திருக்காது.

கட்சி எடுத்துள்ள தீர்மானம் தொடர்பாக எனக்கு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவிக்கப்பட்டதும் எனது சிரேஷ்ட சட்டத்தரணிகளுடன் ஆலோசனை நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வேன். அது மக்கள் தொடர்பாகவும் சட்டரீதியாகவும் இருக்கும்”  என மேலும் தெரிவித்தார்.