சிறிலங்காவில் மத்திய அதிவேக வீதியின் புனரமைப்பு 3 வருடத்திற்குள் நிறைவு

327 0

சிறிலங்காவில் கடந்த 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த மத்திய அதிவேக வீதியின் கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியின் புனரமைப்பு பணிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக நெடுச்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புனரமைப்பு பணிகளை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடவத்த முதல் மீரிகம வரையான பகுதியின் தூரம் சுமார் 36.54 கிலோ மீட்டர் என்பதோடு அதன் அகலம் 24.4 மீட்டராகும்.

4 வழிதடங்களை கொண்டு அமையவுள்ள இந்த வீதியில் அமைக்கப்படவுள்ள மேம்பாலம் ஒன்றின் நீளம் 13.24 கிலோ மீட்டர் என்பதுடன், வீதியை அமைப்பதற்கு 158 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

´சுபிட்சத்தின் நோக்கு´ என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கமைய எதிர்வரும் 3 வருடங்களில் கடவத்த முதல் மீரிகம வரையான வீதியை புனரமைத்து மக்களுக்கு வழங்க உள்ளதாகவும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மேலும் தெரிவித்துள்ளார்.