11 எம்.எல்.ஏ.க்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் தனபால் நாளை விசாரணை

343 0

11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் உச்சநீதிமன்ம் அறிவுரைப்படி சபாநாயகர் தனபால் நாளை விசாரணை நடத்துகிறார்.

எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்ற அறிவுரைப்படி தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் நாளை காணொலி காட்சியின்மூலம் அவர்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் விசாரணை நடத்துகிறார்.
முன்னதாக, தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந்தேதி நடைபெற்ற ஓட்டெடுப்பின்போது, தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.
அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரத்தில் சபாநாயகரே சட்டத்தின் அடிப்படையில் உரிய முடிவை எடுப்பார் என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
இந்த நிலையில், தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 3 மாதங்கள் ஆகியும் சபாநாயகர் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்று ஓ.பன்னீர் செல்வம், கே.பாண்டியராஜன் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’’ என்று கோரப்பட்டு உள்ளது. மணிப்பூர் எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்த வழக்கும் இந்த மனுவில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்தே, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் சபாநாயகர் ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை? என கேள்வி எழுப்பிய  நீதிபதிகள், இந்த விஷயத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினர்.
வழக்கு மீண்டும் ஜூலை 8-ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும்படி சபாநாயகர் மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்தகட்ட விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தியிருந்தது.
ஆகஸ்டு மாதம் 10-ந்தேதி ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வழக்கில் பதிலளிக்க சபாநாயகர் அவகாசம் கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து மேலும் 4 வாரத்திற்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.