கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் யுவதி மீட்பு

287 0

நீர்வேலி வடக்குப் பகுதியில் வானில் கடத்தப்பட்டார் எனக் கூறப்படும் யுவதி கோப்பாய் பொலிஸாரால் நேற்று மாலை மல்லாகத்தில் மீட்கப்பட்டார் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் 4 பேர் கொண்ட கும்பல் 20 வயது மதிக்கதக்க யுவதி ஒருவரைக்கடத்திச் சென்றது என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மல்லாகம் பகுதியில் வைத்து நேற்று மாலை யுவதியையும் அவரைக் கூட்டிச் சென்ற பிரதான சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் யுவதி குறித்த இளைஞனை நீண்ட நாள்களாகக் காதலித்து வந்தார் என்றும், பெற்றோர் யுவதிக்கு திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தவேளை யுவதி வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இளைஞன் யுவதியை கூட்டிக் கொண்டு சென்றுள்ளார் எனவும் தெரியவந்தது.

யுவதியின் பெற்றோர் வேண்டுமென்றே தன் மீது குற்றம் சுமத்தி உள்ளனர் எனவும் பொலிஸ் விசாரணையில் அந்த இளைஞன் தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள யுவதியையும் இளைஞனையும் நாளை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.