ஊடகவியலாளர்  சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல்

379 0

சுட்டு படுகொலை செய்யப்பட்ட   ஊடகவியலாளர்  சகாதேவன் நிலக்சனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடைபெற்றது..

யாழ் ஊடக அமையத்தில் இன்று சனிக்கிழமை மாலை 3.30 மணியளவில் குறித்த நிகழ்வு அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடந்தது.

இந்நிகழ்வில் கொலை செய்யப்பட்ட நிலக்சனின் குடும்பத்தினர், உறவிர்கள், பாடசாலை நண்பர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மலர் மாலை அணிவித்தும், தீபங்கள் ஏற்றியும், மலர்களை தூவியும் நிலக்சனுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தது.

யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவனும் யாழ்.பல்கலை கழக ஊடக வளங்கள் பயிற்சி மையத்தின் ஊடக கற்கை மாணவனும், சாரளம் சஞ்சிகையின் ஆசிரியரும், யாழ்,மாணவர் பேரவையின் முன்னாள் தலைவருமான சகாதேவன் நிலக்சனின் கடந்த 2007 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.
அன்று அதிகாலை வேளை ஆடியபாதம் வீதி கொக்குவில் பகுதியில் உள்ள அவருடைய வீடு இராணுவ புலனாய்வாளர்களும், இராணுவ ஒட்டு குழுவினரும் முற்றுகையிடப்பட்டது.

வீட்டில் இருந்த சகாதேவன் நிலக்சனை விசாரிக்க வேண்டும் என்று கூறிய ஆயுத குழுவினர் வீட்டு வாசலில் அழைத்து விசாரித்தனர்.

இதன் போது சகாதேவன் நிலக்சனின் தாய் தந்தையர்கள் முன்னிலையி விசாரிக்கப்பட்ட போது திடீரென சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.