சிறிலங்காவில் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு

230 0

சிறிலங்காவில் தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நாளை மறுதினம் (செவ்வாய்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழு கூடவுள்ளதாக அதன் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹூல் தெரிவித்தார்.

தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகள், சுகாதார வழிகாட்டல்கள் உள்ளடங்கிய வர்த்தமானி, பொது சுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

கொரோனா ஒழிப்பிற்கான அனைத்து செயற்பாடுகளிலிருந்தும் பொது சுகாதார பரிசோதகர்கள் விலகியுள்ள நிலையில், தேர்தலை நடத்துவதில் இந்த விடயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்திருந்தார்.

எனவே இவ்விடயம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.