ஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து ஆர்ப்பாட்டம்

266 0

கொழும்பில் புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தன அச்சுறுத்தப்பட்டமையினை கண்டித்து கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் ஊடகவியலாளர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கொழும்பில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை(10) ஒரு வழக்கு தொடர்பிலான செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புகைப்பட ஊடகவியலாளர் அகில ஜயவர்தனவை போதைவஸ்து தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் நியுமால் ரங்க ஜீவவினால் அச்சுறுத்தப்பட்டிருந்தார்.

இதனை கண்டித்து இடம்பெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது ஊடக சுதந்திரம் வேண்டும் ஊடகவியலாளரை அச்சுறுதிய பொலிஸாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோஷங்களை எழுப்பியவாறு சுலோகங்கள் ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஊடகங்கள் காலங்காலமாக நெருக்கடிகளையும் பிரச்சினைகளையும் எதிர்கொண்டே தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றன. இச் சம்பவம், தற்போது அனைத்து ஊடகங்களின் பார்வையையும் பெற்றுள்ளதுடன், இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது தடுக்கப்படுவதற்கு அல்லது தவிர்க்கப்படுவதற்கான ஏற்பாடுகளை அனைவரும் மேற்கொண்டாக வேண்டிய தேவையையும் உணர்த்தியுள்ளது.

அந்த வகையில் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் நடைபெறாத வண்ணமான ஒரு சிறப்பான பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படுவதுடன், அச் சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவதும் முக்கியமாகும்.

ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்குக் குரல் கொடுப்பதும் நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதனைத் தவிர்ப்பதற்காகப் பாடுபடுவதும் ஊடகம் சார் அக்கறையுள்ள ஒவ்வொருவரதும் பணியும் கடமையுமாகும் எனவும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.