நேர்மையானவர்களுக்கும் போலிகளுக்குமிடையிலான போட்டியே இந்த தேர்தல்- திகாம்பரம்

247 0

நேர்மையானவர்களுக்கும் போலிகளுக்குமிடையிலான போட்டியே இந்தத் தேர்தல் என ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

எனவே, நேர்மையானவர்களை, சேவை செய்தவர்களைத் தெரிவுசெய்ய வேண்டியது மக்களின் கடமையாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லதண்ணி, மறே தோட்டத்தின் கெட்ஸ் பிரிவில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் குறிப்பிடுகையில், “வில்லை எடுத்துக்கொண்டு போருக்கு போவது போல இந்தத் தேர்தல் தர்ம யுத்தம் என சிலர் கூறுகின்றனர். அவ்வாறு தர்ம யுத்தம் ஒன்றும் கிடையாது.

மக்களுக்கு நேர்மையாக சேவை செய்த அரசியல் வாதிகள் யார், ஏமாற்றியவர்கள் யார் என்பதை அறிந்து நேர்மையானவர்களுக்கு வாக்களிக்கும் தேர்தலாகும். இத்தேர்தலில், தமிழ் முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கடந்த நான்கரை வருடங்களில் மக்களுக்கு சேவை செய்துள்வோம். இவ்வாறு சேவைகளை செய்துவிட்டே வாக்குக்கேட்டு வந்துள்ளோம். எனவே, நாங்கள் தோல்வியடைந்தால் அது மக்களுக்கு ஏற்படும் தோல்வியாகும்.

தமிழ் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சிலர் போட்டியிடுகின்றனர். இதற்கு அரசாங்கமும் துணைநிற்கின்றது. எமது இருப்பை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமெனில் தொலைபேசிக்கு வாக்களிக்க வேண்டும். சிலர் வாக்குகளைப் பெறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். மக்கள் அதனை நம்பக்கூடாது” என்று குறிப்பிட்டார்.