சிறிலங்கா போக்குவரத்து சபையின் வவுனியா சாலை ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா சாலையில் பணியாற்றும் நடத்துனர் ஒருவருக்கு முறையற்ற வகையில் பழிவாங்கும் விதமாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
காலை 5.30 மணிக்கு முன்னெடுக்கப்பட்ட போராட்டம் 10 மணிவரை தொடர்ந்து நீடித்துவந்த நிலையில் சாலையின் முகாமையாளர்,தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொறுப்பதிகாரி ஆகியோர் ஊழியர்களுடன் கலந்துரையாடலை முன்னெடுத்திருந்ததுடன் சில உறுதிமொழிகளையும், வழங்கியிருந்தனர். இதனையடுத்து காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது
குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக பொதுமக்கள் மற்றும் அரச ஊழியர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

