ஜனாதிபதி செயலணிகள் மூலம் இராணுவத்தினருக்கு தடையற்ற அதிகாரம்

384 0

ஜனாதிபதி செயலணிகளின் உருவாக்கம் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும் தடையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார்.

ஜனநாயக ரீதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் வழமையான கொள்கைகளையும் கடந்து, அதிகாரம் மிக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட செயலணிகள் ஊடாக தன்னாட்சி அதிகாரம் உடையவர் போன்று இலங்கையின் ஜனாதிபதி நாட்டை எவ்வாறு ஆட்சி செய்கின்றார் என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு விளக்கப்படமொன்றை சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் வெளியிட்டிருக்கிறது.

இந்த அமைப்புக்கள் சரியான முறையில் மக்களால் தெரிவு செய்யப்படாதவை என்பதுடன், இவை சிவில் சேவையின் முழுமையான ஒத்துழைப்பு தேவைப்படும் ஜனாதிபதியின் நேரடியான பொறுப்பில் இருப்பதுடன், அவை பாராளுமன்றத்தின் வழமையான ஆய்விற்கும் மேற்பார்வைக்கும் உட்படுவதில்லை. செயலாளர்கள் மாத்திரமன்றி அமைச்சர்கள் மற்றும் அமைச்சரவைக் குழுக்கள் இந்த மக்களால் தெரிவு செய்யப்படாத அமைப்புக்களுக்குப் கீழ்ப்படிந்து பணியாற்ற வேண்டியிருக்கும். அவை அவ்வாறு செயற்படாவிட்டால் தமது தொழில்களுக்குக் குறிப்பிட்டுக்கூற முடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக ஜனாதிபதிக்கு அவை குறித்து அறிவிக்கப்படும்.

அரசியல் யாப்பில் திருத்தம் செய்யக்கூடியதாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி பெற்றுக்கொள்வார் என்று நம்பப்படும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல்கள் காரணமாக இது மேலும் கவலையடையச் செய்கிறது என்று விளக்கப்படத்துடன் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த செயலணிகள் ஒரு சமாந்தரமான அரசை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டிருப்பதுடன் பெரும்பாலும் ஜனாதிபதி, அவரது குடும்பம் மற்றும் முன்னாள் இராணுவச் சகபாடிகளுக்கு ஆதரவு வலையமைப்புக்கள் மற்றும் பொதுச்சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கான இணையற்ற அதிகாரத்தை வழங்குகிறது என்று மேற்படி செயற்திட்டத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்திருக்கிறார். அத்தோடு ‘அண்மைய மாற்றங்கள் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும் தடையற்ற அதிகாரத்தை வழங்குகிறது’ என்றும் சூக்கா குறிப்பிட்டிருக்கிறார்.

செயலணிகளின் உருவாக்கமானது சட்டரீதியாகக் கேள்வி எழுப்பக்கூடியதாகவும் நிர்வாக ரீதியாக இருண்டதாகவும் உள்ளதாக இலங்கையிலுள்ள வழக்கறிஞர்கள் கூறியிருப்பதாக தமது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம், செயலணிகளுக்குக் கால எல்லை இல்லை என்பதுடன் அதற்கான வரைவு ஒழுங்கற்றதாகவும், ‘செயலணி’ என்ற பெயர் இராணுவமயமாக்கலை நினைவூட்டுவதாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.