விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் விடுதலை.

264 0

மட்டக்களப்பில் ஆயுதங்கள் கொண்டு சென்றதாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் முன்னாள் உறுப்பினர்கள் எட்டுப்பேர் அந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.

14-03-2003 திகதி கல்லடி பாலத்தில் உள்ள சோதனைச்சாவடியில் பிக்கப் வாகனம் ஒன்றை படையினர் சோதனையிட்டபோது அதில் இருந்து நான்கு கைக்குண்டுகளும் 100 ரவைகளும் மீட்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் எட்டு விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஆயுதங்களுடன் பயணித்த குற்றசாட்டுக்காக பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் அடிப்படையில் 2004ம் ஆண்டு குறித்த எட்டுப்பேரும் பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் 2006ம் ஆண்டு தொடக்கம் நடத்தப்பட்டுவந்தது.

இதன்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், அரசபகுப்பாய்வு திணைக்களம் ஆகியவற்றின் அரச தரப்பு சாட்சியங்கள் பெறப்பட்டு எதிர்த்தரப்பு சாட்சியங்களும் பெறப்பட்டு விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சந்தேக நபர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

குறித்த வழக்கின் எதிரிகளின் மீதான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எதிரிகளின் பிரத்தியேக உடமைகளில் குறித்த ஆயுதங்கள் இருக்காத நிலையிலும் ஆள் அடையாளம் தொடர்பில் அரசதரப்பில் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்த தவறியதால் மேன்முறையிட்டு நீதிபதி எம்.என்.எம். அப்துல்லாவினால் கடந்த 22-06-2020 சகல எதிரிகளும் விடுதலைசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட சட்டத்தரணி பிரேம்நாத் தெரிவித்தார்.