கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரசாயன ஆய்வுகூடம் அமைக்க நடவடிகை!

245 0

சிறிலங்காவில் சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான நிறுவனம் ஒன்றினால், 45 மில்லியன் பெறுமதியான  உபகரணங்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வழங்கியுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க  தெரிவித்துள்ளார்.

இந்த உபகரணங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று(செய்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறித்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி சுற்றுலாப் பயணிகளுக்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் திறக்கப்படவுள்ள அதேவேளை, மத்தளை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையமும் அதே தினத்தில் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக திறக்கப்படவுள்ளது.

அத்துடன், மத்தளை மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தரும் விமானங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட உள்ளதாகவும், குறித்த விமான நிலையம் ஊடாக பயணிக்கும் உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகள் அனைவரும் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வருகை தரும் பயணிகளுக்கு தற்போது PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் அதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்துக்காக தனியான இரசாயன ஆய்வு கூடத்தை நிறுவவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த சர்வதேச இடம்பெயர்ந்தோருக்கான நிறுவனத்தினால் வழங்கப்பட்டுள்ள உபகரணங்களில், பயணிகளின் உடல் வெப்ப நிலையை புற ஊதாக் கதிர்களின் மூலம் அளவிடும் 7 உபகரண தொகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.