மக்கள் சிந்தனையாளன் ஐங்கரநேசனும் மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களும்- சு.பசுபதிப்பிள்ளை

333 0

pasupathippillaiஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு  சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி ஊற்றுப்புலத்தில் நடைபெற்ற விதைச் சுத்திகரிப்பு நிலையத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது,

விவசாய அமைச்சருக்கு கிடைத்த  உத்தியோகத்தர்கள் மிகவும் நல்லவர்கள். இலஞ்சம் ஊழலில் ஈடுபடாதவர்கள். வேறு சிலரைப்போல் அடாவடித்தனத்தில் ஈடுபடுபவர்கள் அல்ல. பணம்பெற்றுக்கொண்டு வறிய மக்களின் காணியைப் பறித்து பணக்காரர்களுக்கு கொடுத்து கையூட்டுப் பெறுபவர்கள் அல்லர்.

உண்மையிலேயே ஐங்கரநேசன் அவர்களின் அமைச்சுகளின் கீழ் இருக்கும் உத்தியோகத்தர்கள் மக்கள் பணியில் விசுவாசமாகச் செயற்படுபவர்கள். அரச அதிகாரிகளாக தங்களை அர்ப்பணித்து அமைச்சருடன் ஒத்துழைத்து மக்களுக்கான சேவையை முழுமையாகச் செய்கிறார்கள். அமைச்சரின் கீழ் இருக்கும்  திணைக்களங்கள் அல்லது துறைகளில் ஏதாவது பிரச்சினையென்றால் மக்கள் உடனடியாக அமைச்சருக்குத் தெரியப்படுத்தலாம். தகவல் கிடைத்த அடுத்த நாளே அதற்குரிய நடவடிக்கை அமைச்சரால் எடுக்கப்படும். தேவைப்பட்டால் நேரில் வந்தே பிரச்சினைக்குத் தீர்வு காண்பார். இதில் எனக்கு பல அனுபவங்கள் இருக்கிறன.

நான் யாருக்கும் முகத்துதி பாடுபவன் அல்ல. அது எனது பழக்கமும் அல்ல. ஆனால் ஓர் உண்மையைச் சொல்லியாகவேண்டும் வடமாகாண அமைச்சர்களுக்குள் மிகவும் திறம்படச் செயற்படும் ஓர் அமைச்சர் என்றால் அது ஐங்கரநேசன்தான்.

காய்த்தமரம்தான் கல்லடிப்படும். அதுபோலத்தான் சில மனிதாபிமானமற்றவர்கள்  அமைச்சர் ஐங்கரநேசன்மீது  அவதூறு  பரப்பப் புறப்பட்டுள்ளார்கள்.  எங்களில் ஒருவர் ஒரு சீடி கொடுத்துள்ளதாக அறிக்கைவிடுத்துள்ளார். மக்களையும் ஏதாவதிருந்தால் கொடுக்கும்படியும் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது மக்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள். யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதைப் பகுத்தறியும் ஆற்றல் படைத்தவர்கள். மக்கள் சிந்தனையற்று சுயநலமாச் செயற்படும் மனப்பிறள்வாளர்களின் கருத்துக்கெல்லாம் அவர்கள் செவிசாய்க்கமாட்டார்கள். சொல்வது இலகு செய்வது கஸ்ரம். ஐங்கரநேசன் அவர்கள் மக்கள் பணியை நித்தம் செய்யும் செயற்பாட்டாளர். மக்களைக் குழப்புவதே முழுநேரத் தொழிலாகக் கொண்டு  சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பாக மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்று மேலும் தெரிவித்தார்.