இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக வருகை தந்த தந்தை- மகள் பொலிஸாரிடம் சரணடைந்தனர்

256 0

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக படகு மூலம் தலை மன்னாரிற்கு வந்த இரண்டு பேர், மடு பொலிஸ் நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சரணடைந்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் மடு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்தியா- தமிழ்நாடு, கோயம்புத்தூர் அகதிகள் முகாமில் இருந்து கடல் மூலம் நேற்று  அதிகாலை, 33 வயதுடைய தந்தை மற்றும் 8 வயதுடைய மகள் ஆகிய இருவரும் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்தனர்.

வருகை தந்த இருவரையும், 33 வயதுடைய நபரின் தந்தையார் ஊடாக மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன பண்டிவிரிச்சான் கிராமத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்

மேலும்  தற்போது ‘கொரோனா’ காலம் என்பதால் இந்தியாவில் இருந்து வந்த மகன் மற்றும் மகனின் மகள் ஆகிய இருவரையும் அழைத்துச் சென்று  மடுப் பொலிஸ் நிலையத்தில்  சரணடைந்துள்ளனர்.

இவ்வாறு அழைத்துச் சென்ற நபர், அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதுடன் படகு மூலம் வந்த தந்தை மற்றும் மகள் இருவரையும் மடுப் பொலிஸார் கைது செய்து விசாரணைகளை செய்து வருகின்றனர்.

விசாரணைகள் முடிந்தவுடன் குறித்த இருவரும் தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.