வின்ட்சர் கோட்டை மைதானத்தில் இங்கிலாந்து ராணி குதிரை சவாரி

244 0

வின்ட்சர் கோட்டையில் உள்ள மைதானத்தில் குதிரை மீது 94 வயதான ராணி இரண்டாம் எலிசபெத் கம்பீரமாக சவாரி செல்லும் படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியதுமே ராணி இரண்டாம் எலிசபெத் (வயது 94), கணவர் இளவரசர் பிலிப்புடன் (98) பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து வெளியேறினார்.

அவர்கள் வின்ட்சர் கோட்டையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுடன் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களும் உள்ளனர்.

கொரோனாவுக்கு பின்னர் ராணி இரண்டாம் எலிசபெத் பொதுவெளியில் தோன்றவில்லை.

ஊரடங்கு காலத்தில் அபூர்வ நிகழ்வாக அவர் டெலிவிஷனில் தோன்றிப்பேசினார். அப்போது அவர் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் என்று கூறினார். ஊரடங்குக்கு ஒத்துழைப்பு வழங்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

இந்த நிலையில் அவர் வின்ட்சர் கோட்டையில் உள்ள மைதானத்தில் வார இறுதி நாளில் குதிரையில் சவாரி சென்றார். 14 வயதான குதிரை மீது அவர் கம்பீரமாக சவாரி செல்லும் படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. ஊரடங்கு தொடங்கிய பின்னர் அவர் பொதுவெளியில் தோன்றியது இதுவே முதல் முறை.

வின்ட்சர் கோட்டை மைதானத்தில் குதிரை சவாரி செல்வது ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொள்ளை இஷ்டம் என்று சொல்லப்படுகிறது.