அனைவரிடமும் அன்பு பாராட்டிய தலைவர்- கே.என்.லட்சுமணன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் இரங்கல்

240 0

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என்.லட்சுமணன் மறைவுக்கு தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் (வயது 92), முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவையொட்டி தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

அரசியல் , ஆன்மீகம் , கல்வி என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் அமரர் கே.என். லட்சுமணன் அவர்களின் இழப்பு மறைவு தமிழகத்திற்கு பேரிழப்பாகும்.

பண்டித் தீனதயாள், வாஜ்பாய் ஆகியோர் முதல் அத்வானி, பிரதமர் மோடி வரை அனைவரிடமும் நெருக்கமாக திகழ்ந்தார். பிரதமர் மோடி கடந்த 21-5-2020 அன்று கே.எஸ்.லட்சுமணன் அவர்களை தொடர்பு கொண்டு அவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து விசாரித்தார். 2006 முதல் தேசிய பொதுக்குழு உறுப்பினராக பணிபுரிந்து வந்தார்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மாபெரும் தேசப்பற்று மிக்க தலைவர் இவர். அனைவரிடமும் அன்பு பாராட்டும் பெருமை மிக்க தலைவர் அமரர் கே.என்.லட்சுமணன் அவர்களை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தொண்டர்களுக்கும் தமிழக பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.

தெலுங்கானா ஆளுநரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘கொள்கைப் பிடிப்போடு எளிய வாழ்க்கை வாழ்ந்து பலருக்கும் வழிகாட்டியாக திகழ்ந்தவர் கே.என்.லட்சுமணன்’ என கூறியுள்ளார்.