கொடிகாமத்தில் யுவதி கடத்தல் – பொலிஸ் முறைப்பாடு எடுக்க தயக்கம்

232 0

யாழ்.கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றினுள் ஊரடங்கு நேரத்தில் புகுந்த வெள்ளைவான் கும்பல் ஒன்று யுவதியொருவரை கடத்தி சென்று சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை), கொடிகாமம் பகுதியிலுள்ள வீடொன்றினுள்  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு அமுலில் இருந்தவேளை வெள்ளை வானில் வந்த 7 பேர் கொண்ட குழுவினர் வாளுகள், கொட்டான்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, யுவதியை கடத்த முயன்றுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போது, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன் யுவதியை வாள் முனையில் வெள்ளை வானில் ஏற்றி கடத்தி சென்றுள்ளனர்.

உடனடியாக சம்பவம் தொடர்பில் வீட்டார் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்த போதிலும், அவர்கள் நேரில் வந்து முறைப்பாடு செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதனடிப்படையில் அவர்கள் பொலிஸ் நிலையம் செல்ல முயன்றபோது, யுவதியை கடத்தி சென்றவர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்திற்கு அருகில் யுவதியை வாகனத்திலிருந்து இறக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ய சென்ற போது, அங்கு முறைப்பாட்டை ஏற்கும் பிரிவில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர், யுவதி தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதால், இதனை கடத்தல் என முறைப்பாடு செய்ய முடியாது. ஊரடங்கு நேரத்தில் உங்கள் வீட்டிற்குள் வந்தார்கள் என்றே முறைப்பாடு வழங்க முடியும். இதனை பெரிதுப்படுத்தாமல் விடுங்கள் என எச்சரிக்கும் தொனியில் அறிவுறுத்தியுள்ளார். அதனால் பெற்றோர் முறைப்பாட்டை வழங்க தயக்கம் காட்டியுள்ளனர்.

அதன் பின்னரே, குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் சகோதரன் முறையானவரின் தலைமையில் சென்ற குழுவினரே குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் விபரம் பெற்றோருக்கு தெரிந்துள்ளது.

இந்நிலையில்  யுவதியின் பெற்றோர், குறித்த சம்பவம் தொடர்பில் தமக்கோ தமது பிள்ளைக்கோ எதிர்காலத்தில் ஆபத்து நேரிடலாம் எனும் அச்சத்தில் உள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கொடிகாம பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.