யாழ்ப்பாண மாவட்டத்தில் 2,195 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

289 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் இந்த வருடம் இன்று வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே மக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் டெங்கு நோயிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள முடியாது என யாழ் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்.தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா தெரிவித்துள்ளார் .

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு தாக்கம் தொடர்பில் கருத்து தெரிவித்த வைத்திய நிபுணர், தற்போது டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்ககூடிய சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன எனவே டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் சுகாதாரப் பிரிவினர் ஈடுபட்டுள்ள நிலையில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரினால் எதிர்வரும் மாதம் முதல் வாரம் டெங்கு விழிப்புணர்வு வாரமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த நோயினால் கடந்த வருடம் இலங்கையில் ஒரு லட்சத்துக்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த வருடம் எண்ணாயிரம் பேர் இந்த டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்குரிய சிகிச்சைகள் உரிய முறையில் வழங்கப்பட்டது எனினும் இந்த வருடம் மே மாதம் வரை 2195 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவர்களுக்குரிய சிகிச்சைகள் யாழ் போதனாவைத்தியசாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஜனவரி பெப்ரவரி மாதங்களில் கூடுதலாக இந்த நோயின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது ஏனெனில் அந்த காலப்பகுதியில் மழைவீழ்ச்சி அதிகம் காணப்பட்டமையினால் குறித்த தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

அதேபோல் கடந்த மாதம் பெய்த மழையின் காரணமாக மீண்டும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்க கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது குறிப்பாக யாழ்மாவட்டத்தில் கூடுதலாக சங்கானை உடும்பிராயு நீர்வேலி சுண்டுக்குளி போன்ற இடங்களில் இருந்து நோயாளர்கள் கூடுதலாக வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது .

இந்த நோய் நுளம்பினால் பரவுகின்ற ஒரு நோயாகும் எங்கேயாவது நல்ல நீர் தேங்கி நிற்கும் ஆனால் சிரட்டை அல்லது ஐஸ்கிரீம்கப், தகரப்பேணிகள், முதலானவற்றை கண்ட இடங்களில் எறியும் போது மழை பெய்யும்போது இதில் நீர் தேங்கி நின்று அந்த நீரில் நுளம்புகள் முட்டையிடும் அந்த முட்டை பொரித்து 5 தொடக்கம் 10 நாட்களுக்குள் அது நுளம்பாக மாற்றமடைந்து அந்த நுளம்பு முட்டையில் டெங்கு வைரஸ் இருக்கலாம் அந்து நுளம்பு இந்த வைரஸினை காவிக்கொண்டு மக்களை கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகின்றது.

இந்த நுளம்புகள் குறிப்பாக மாலை வேளைகளில் தான் அதிகமாக மக்களை தேடிச்சென்று கடிக்கின்றது எனவே மக்கள் வீடுகளில் இருக்கும் போது மாலை நேரங்களில் தமது அறையின் கதவுகளை தாழிட்டு இருப்பது மிகவும் சிறந்தது அல்லாவிட்டால் கொல்லி மருந்துகள் மற்றும் நுளம்புத்திரி போன்றவற்றினை கொளுத்தி வீடுகளில் வைப்பதன் மூலம் குறித்த நுளம்பு தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் யாழ் போதனா வைத்தியசாலை பொது வைத்திய நிபுணர்.தம்பிப்பிள்ளை பேரானந்தராஜா மேலும் தெரிவித்தார்.