மீன்பிடி தடைக்காலம் 61 நாட்களில் இருந்து 47 நாட்களாக குறைப்பு: வழக்கம் போல ஜீன் 15 அன்றே கடலுக்கு செல்வதாக ராமேசுவரம் மீனவர்கள் அறிவிப்பு

215 0

இந்தியாவன் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்திற்கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரை இரண்டு மாதங்களுக்கு விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளுர் ஆகிய 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது என கடந்த ஏப்ரல் 15 அன்று தடை விதிக்கப்பட்டது.

முன்னதாக கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் சமூக இடைவெளி அவசியம் என்பதால் தமிழக விசைப்படகு மீனவர்கள் கடந்த மார்ச் 20லிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் இந்த தமிழக ஆண்டு விசைப்படகு மீனவர்கள் தொடர்ச்சியாக 3 மாதங்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. எனவே தமிழக விசைப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீன்பிடித் தடைக்காலத்தை குறைத்து விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்வதற்கான அனுமதியை விரைவில் வழங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.

கரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை, பின்னர் மீன்பிடி தடைக்காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடை காலத்தை ஏப்ரல் 15 முதல் மே 31 வரையிலான 47 நாட்களாக குறைத்துக் கொள்வதான உத்தரவை மத்திய மீன் வள அமைச்சகம் ஆணையர் சஞ்சய் பாண்டே பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவ பிரதிநிதிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்களால் தங்கள் படகுகளை பழுது நீக்கவோ, பராமரிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதே போல் மீன்பிடி தடை காலத்துக்கு பின் மீனவர்கள்; பிடித்து வரும் நண்டு , இறால் ஆகிய மீன்களை ஏற்றுமதி செய்யக்கூடிய நிறுவனங்கள் ஆள்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசு அறிவித்த ஜீன் 1ந்தேதிக்கு பதிலாக ஜீன் 15ம் தேதி மீன் பிடிக்க செல்ல உள்ளதாக அறிவித்தனர்.

மேலும், மீன்பிடி தடை காலம் முடிந்து மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது நடுக்கடலில் இலங்கை கடற்படை தாக்குதலை தவிர்க்க மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.