சிறிலங்காவில் அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை – கல்வி அமைச்சு

242 0

சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறைமையினூடாக 60 வீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் எவ்வித தொலைதூர கல்வி வசதிகளையும் பெற முடியாத 40 வீதமான மாணவர்களும் ஏதேனும் ஒரு முறைமையினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என்.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், பாடசாலை மட்டத்தில் அச்சிடப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கற்றல் முறைமையினூடாக கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.