யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவுபெற்றும் அது பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்படாதமை சமூக மட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தமிழ்மணி அகழங்கன் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற நடைபவனியில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கம்போதே தமிழ்மணி அகழங்கன் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் 25ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று, நடைபவனி ஒன்று நடைபெற்றது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகமானது வடக்கு மாகாண இணைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்லூரியாக 1991ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டு 25 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு இன்று கல்லூரி சமூகத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட நடைபவனியானது கல்லூரி முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
நடைபவனி நிகழ்வானது காலை 08 மணிக்கு வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி, சிந்தாமணிப்பிள்ளையார் கோவிலூடாக கண்டி வீதி சென்று பஸார் வீதி வழியாக ஹொறவப்பொத்தான வீதியை அடைந்து மாவட்ட செயலக வழியாக மன்னார் வீதியைச் சென்றடைந்தது.
பின்னர் அங்கிருந்து பூங்காவீதியிலிருக்கும் பல்கலைக்கழக வளாகத்;தைச் சென்றடைந்தது.
இந்நிகழ்வில் கல்வியாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது அமைப்புக்கள், பல்கலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பல்கலைக்கழக உத்தியோகர்தர்கள் என பலரும்கலந்து கொண்டனர்.