அமெரிக்காவில் கொரோனா பெயரால் ரூ.97 கோடி நிவாரண மோசடி – இந்திய என்ஜினீயர் சிக்கினார்

272 0

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பெயரால் ரூ.97 கோடி நிவாரண கடன் பெற மோசடியில் ஈடுபட்ட இந்திய என்ஜினீயர் சிக்கினார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவத்தொடங்கியபோது கடந்த மார்ச் மாதம் ‘கேர்ஸ் சட்டம்’ என்ற பெயரில் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம், கொரோனா வைரசால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பெருமளவில் அவசர நிதி வழங்க வகை செய்துள்ளது.

இந்த நிவாரண சட்டத்தின்படி, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய சிறு தொழில் நிறுவனங்களுக்கு 349 பில்லியன் டாலர் வரையில் (சுமார் ரூ.26 லட்சத்து 17 ஆயிரத்து 500 கோடி) கடன் பெற முடியும்.

இந்த சட்டத்தினை ஏமாற்றி மோசடி செய்யும் முயற்சியில் இறங்கிய இந்திய வம்சாவளி என்ஜினீயர், அங்கு சட்டத்தின் பிடியில் வசமாக சிக்கி உள்ளார். இதைப் பற்றிய பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து வருபவர், சஷாங் ராய் (வயது 30). இவர் கொரோனா நிவாரண சட்டத்தின் கீழ், ஒரு வங்கியில் 1 கோடி டாலர் (சுமார் ரூ.75 கோடி) கடன் வழங்குமாறு விண்ணப்பித்தார். அதில் அவர், தனது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் வேலை பார்ப்பதாகவும், சராசரியாக அவர்களுக்கு மாதம் 4 மில்லியன் டாலர் (சுமார் ரூ.30 கோடி) சம்பளம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இரண்டாவதாக மற்றொரு வங்கியில் 30 லட்சம் டாலர் (சுமார் ரூ.22 கோடியே 50 லட்சம்) கடன் கேட்டு விண்ணப்பம் அளித்தார். அதில் தனது நிறுவனத்தில் 250 ஊழியர்கள் உள்ளதாகவும், அவர்களது மாத சராசரி சம்பளம் 1.2 மில்லியன் டாலர் (சுமார் ரூ.9 கோடி) எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த விண்ணப்பங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

அதில் 2020-ம் ஆண்டில் சஷாங்ராய் அல்லது அவரது நிறுவனம், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கியதற்கான ஆவணம் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தகவலை, டெக்சாஸ் தொழிலாளர் ஆணையம், புலனாய்வு அமைப்புக்கு வழங்கியது.

இதே போன்று அவரது நிறுவனம், 2019-ம் ஆண்டின் நான்காம் காலாண்டு அல்லது 2020-ம் ஆண்டின் முதல் காலாண்டில் எந்த வருவாயையும் காட்டவில்லை என்று டெக்சாஸ் கணக்கு தணிக்கையர் அலுவலகம் தெரிவித்தது.

இது அவர் தொழில் நிறுவனங்கள் நடத்துவதாக கூறி மோசடி செய்து கடன் பெற முயற்சித்ததை காட்டுவதாக அமைந்தது.

இதனால் அவர் மீது பியூமாண்டில் உள்ள மாவட்ட கோர்ட்டில் மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

கொரோனா வைரஸ் நிவாரண கடனிலும், இந்தியர் மோசடி செய்ய முயற்சித்தது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.