முல்லைத்தீவில் பப்பாசி தோட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டியழித்த விசமிகள்!

428 0

முல்லைத்தீவு, உடுப்புக்குளம் பகுதியில் விவசாயி ஒருவரின் பப்பாசி தோட்டத்தில் பப்பாசி மரங்கள் மற்றும் தோட்டத்தின் ஏனைய பயிர்களை வாளால் வெட்டி அழித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

உடுப்புக்குளம் பகுதியில் செல்லத்தம்பி முத்துராஜ் என்ற விவசாயி சூரிய மின்கலத்தினைப் பயன்படுத்தி விவசாயம் மற்றும் பப்பாசி செய்கையில் ஈடுபட்டுவந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) சில விசமிகள் தனிப்பட்ட காரணத்தினால் இவரின் தோட்டத்திற்குள் புகுந்து பப்பாசி மரங்களை அடியோடு வெட்டி சாய்த்துள்ளார்கள்.

தனிப்பட்ட தகராறின் காரணமாக நான்கிற்கு மேற்பட்டவர்கள் தோட்டத்திற்குள் புகுந்துள்ளார்கள் எனவும் அங்கு ஆட்கள் அற்ற நிலையில் இவ்வாறான மனிதநேயமற்ற செயற்பாட்டினை செய்துள்ளார்கள் எனவும் குறிப்பிடப்படுகிறது.

இதன்போது, 126 பயன்தரு பப்பாசி மரங்கள் மற்றும் முருங்கை மரம் வெட்டப்பட்டதோடு சூரிய மின்கலம், நீர் குழாய்கள் உள்ளிட்டவையும் சேதமாக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.