மே நான்காம் நாள் நினைவில் முள்ளிவாயக்கால்

509 0

மே நான்காம் நாள் நினைவில் முள்ளிவாயக்கால்

மனித அத்தியாவசிங்களின் நிலை!

ஊருக்கு ஊர் நகரும்போது உறைவிடங்கள் தேய்ந்ததாய்
உண்மையில் இங்கே அது பயன்ற்றுப் போயிற்று,
ஆடை என்பது இவ்விடத்தில் அலங்காரமற்ற ஒன்றாகி
ஆதியில்போல் அது மான மறைப்புக்கு மட்டுமே என்றாகிற்று.

உணவு என்பது சிக்கனமாய், சிறிதாய் என்றாலும்
அது சிறுவர்களுக்கு மட்டுமே போதுமென்றாயிற்று,
மரணத்தின் இடரலுள்ளும் மானங்கெடும் என்பதனால்
குலப் பெண்களெல்லாம் தம் குடலை இறுக்கினார்கள்.

உலகப் பெருமடங்கின் தண்ணீர்க்கரையின் ஓரம்தான்
உலர்ந்த தொண்டையை நனைப்பதற்கோ உரிய நீரில்லை,
குண்டு விழுந்தால் கிணறாகி நீரூறும் என்பார்கள்
ஆனாலும் அதில் உதிரமே ஊறுமளவிற்கு உண்டானதே நிலை!

இதை யார் கண்டார்? யார் கேட்பார்?
இது முள்ளிவாய்க்கால்
மே நான்காம் நாள்.

-வன்னியூர் குரூஸ்-