கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தது

321 0

201611161515338064_krishna-river-water-came-up-to-the-border-of-tamil-nadu_secvpfகண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தடைந்தது. பூண்டி ஏரிக்கு நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பூண்டி ஏரியில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. இதையடுத்து கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையில் இருந்து கடந்த மாதம் 11-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் 20-ந் தேதி பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 1300 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்தது..

இந்நிலையில் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு கடந்த 7-ந் தேதி காலை திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் கிருஷ்ணா நதி கால்வாய் தண்ணீர் வரத்து இன்றி மீண்டும் வறண்டது.

ஆந்திர விவசாயிகள் தண்ணீர் திருடுவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டதாக ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து கண்டலேறு அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுக்கு கடந்த 8-ந்தேதி கடிதம் எழுதினர். இதனை ஏற்று 9-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. முதலில் வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட்டனர். அதன்பின் தண்ணீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 1500 கனஅடியாக உயர்த்தப்பட்டது.

இந்த தண்ணீர் 152 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து நேற்று இரவு 12.10 மணிக்கு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வந்தடைந்தது.

தற்போது வினாடிக்கு 25 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. படிப்படியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பூண்டி ஏரிக்கு நாளை (வியாழன்) தண்ணீர் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு கனமழை காரணமாக இதே நாளில் பூண்டி ஏரி 33 அடியை எட்டியது. (மொத்த உயரம் 35 அடி).

எனவே பாதுகாப்பு நடவடிக்கையாக பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் 10 ‌ஷட்டர்கள் வழியாக திறந்து விடப்பட்டது. வினாடிக்கு 12,000 கனஅடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு கடலில் விடப்பட்டது.

பூண்டி ஏரியில் இன்று காலை 6 மணி நேர நிலவரப்படி நீர்மட்டம் 18. 02 அடியாக பதிவானது. வெறும் 110 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு லிங்க் கால்வாயில் வினாடிக்கு 66 கனஅடியும் பேபி கால்வாயில் 30 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.