கொரோனாவை கட்டுப்படுத்த மருந்து தயார்- அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

399 0

கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை தொடர்ந்து மிரட்டி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இதில் சில மருந்துகள் சோதனை அடிப்படையில் உள்ளன. சில மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், கொரோனா வைரசை ரெம்டெசிவிர் மருந்து கட்டுப்படுத்துவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த செய்தியை அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிலியட் என்ற மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘கொரோனா நோயாளிகளுக்கு வைரசுக்கு எதிரான ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டதில் நல்ல பலன் கிடைத்தது. முதல் ஐந்து நாட்கள் ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டது. இரண்டு வாரங்களில் பாதி பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ரெம்டெசிவிர் மருந்தின் மூன்றாவது பரிசோதனைதான் இறுதியானது. மருந்துக்கான அனுமதி பெறுவதற்கான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை தேசிய அலர்ஜி மற்றும் தொற்று நோய்கள் நிறுவனம் (என்ஐஏஐடி) மதிப்பீடு செய்து தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், மற்ற மருந்துகளை விட கிலியட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மருந்து 31 சதவீதம் கூடுதல் பலனை அளித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.
மற்ற வைரஸ் தடுப்பு மருந்துகளை கொடுக்கும்போது சராசரியாக 15 நாட்களில் நோயாளிகள் குணமடைகின்றனர். ஆனால் ரெம்டெசிவிர் மருந்தால் 11 நாட்களில் நோயாளி குணமடைந்துள்ளார் என்றும் என்ஐஏஐடி கூறியுள்ளது.
என்ஐஏஐடி தலைவர் அந்தோனி பாயுசி கூறுகையில்,“நோயாளிகளை மீட்பதற்கான நேரத்தைக் குறைப்பதில் ரெம்டெசிவிர் ஒரு தெளிவான, குறிப்பிடத்தக்க, நேர்மறையான விளைவைக் கொண்டிருப்பதாக தரவுகள் காட்டுகின்றன. 31 சதவிகித முன்னேற்றம் என்பது, 100 சதவிகிதம் நாக் அவுட் போல் தெரியவில்லை என்றாலும், தற்போதைய முன்னேற்றம் மிக முக்கியமானது. ஏனென்றால் இந்த மருந்தால் வைரசை தடுக்க முடியும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
இந்த மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கும் சோதனை முயற்சி பிப்ரவரி 21ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசியாவின் 68 இடங்களில் 1,063 பேருக்கு இந்த மருந்து கொடுத்து பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறிது.
கொரோனாவை குணப்படுத்துவதற்கு இந்த மருந்தை உட்கொண்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலாக பயன்படுத்த முடியும்.