முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை-சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

302 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் marainthum-vazhum-mamanithar-600x320பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மட்டக்களப்பு மாவட்ட நீதிவானும் மேலதி நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எம்.பி.முகைதீன் முன்னிலையில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோருக்கே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், 2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி சந்தேக நபரான சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வருகின்றனர்.