யேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினூடாக தாயக மக்களுக்கு உலர்உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

1263 0

கொரோனா கொடிய தொற்றுநோயினால் உலகளாவிய ரீதியில் முடக்கப்பட்டிருக்கும் இயல்புவாழ்க்கை எமது தாயகத்திலும் மிகப்பெரும் அவலத்தை கொண்டுவந்துள்ளது.
ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவுக்கான பாரிய இடர்பாட்டினை எதிர்நோக்கிய தினக்கூலி வருமானத்தை அடிப்படையாக கொண்டு வாழ்வியலை மேற்கொண்ட மக்கள் பெரும் அவலத்தை நோக்கி செல்கின்றனர்.

யேர்மனியிலும் கொரோனா தொற்றுநோயினால் எமது மக்கள் கடும் ஆபத்தில் வாழ்ந்தாலும் தாயக உறவுகளுக்கு இடர் நேர்ந்த தருணத்தில் கைகொடுத்து நிற்பது எமது மக்கள் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பை காட்டி நிற்கின்றது.

யேர்மன் வாழ் தமிழ் மக்கள் Help for Smile e.V. அமைப்பினால் வழங்கிய நிதியுதவியில் முதல் கட்டமாக மட்டக்களப்பு அம்பாறை ,கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த தினக்கூலி வருமானத்தில் வாழும் குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாவீரர் குடும்பங்கள் மற்றும் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு (மொத்தமாக 310 குடும்பங்களுக்கு) அரிசி, பருப்பு, மா, சீனி, போன்ற பல்வேறான உதவிப் பொருட்களை Green Future Nation Foundation தொண்டு நிறுவனம் வழங்கி உதவியுள்ளார்கள். மேலதிகமான நிவாரண உதவிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

காலத்தின் தேவையறிந்து தாயக மக்களின் துயர் நீக்க கரம் கொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் Help for Smile e.V. அமைப்பாகிய நாம் எமது நன்றியை தெரிவிக்கின்றோம்.