தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் வலியுறுத்தல்

331 0

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரண நடவடிக்கைளில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரையும் இணைத்துக் கொள்ளவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளில் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் இணைந்து செயற்படுகின்றமை கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளரை ஊக்குவிக்கும் என்பதன் காரணமாகவே அதனைத் தவிர்த்துக் கொள்ளுமாறு ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்விடயத்தை வலியுறுத்தி சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவின் ஏனைய இரு உறுப்பினர்களான என்.ஜே.ஆபேசேகர மற்றும் பேராசிரியர் ரத்னஜூவன் ஹூல் என்போரது கையெழுத்துடன் இம் மாதம் 20 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது

தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2165/70 ஆம் இலக்க மற்றும் கடந்த மார்ச் மாதம் 6 ஆம் திகதிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள கட்டளைகளுக்கு மேலதிகமாக வெளியிடப்படுகின்ற கட்டளைகளாகும்

தேர்தல் காலப்பகுதியில் பிரஜைகளுக்கு அரசாங்கத்தினால் பகிர்ந்தளிக்கப்படுகின்ற நிவாரணங்கள் வழங்கும் நடவடிக்கைகளில் அனைத்து அமைச்சர்கள் ; திணைக்களங்கள் நியதி சட்டசபைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் என்பவற்றின் அலுவலர்கள் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரோடும் இணைந்து செயற்படுவது கட்சிகள், குழுக்கள் அல்லது வேட்பாளர் ஊக்குவிப்பைத் தூண்டுவதால் அதனைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.